×

காதல் திருமணம் செய்த 10 நாளில் வாலிபர் கொடூர கொலை: மனைவியின் உறவினர்களிடம் விசாரணை

சேலம்: சேலத்தில் காதல் திருமணம் செய்த 10 நாளில் புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அவரது மனைவியின் உறவினர்கள் 3 பேரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகில், உள்ள முட்புதரில் நேற்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சூரமங்கலம் போலீசார் சென்றனர். அப்போது, அவர் சத்தம் போடாமல் இருக்க, வாயில் துணியை திணித்து கழுத்தை அறுத்தும், முகத்தை சிதைத்தும் படுகொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனிடையே, தனது மகன் முபாரக்கை (22) காணவில்லை என்று அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்திருந்த தந்தை சையத் சசியிடம் சடலத்தை போலீசார் காண்பித்தனர். அப்போது, அவர் சடலமாக கிடப்பது முபாரக் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முபாரக்(22) லைன்மேட்டை சேர்ந்த அக்பர்அலியின் மகள் ஷஜினாபானு(21) என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக, ஷஜினாபானு கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது முபாரக், தனது மனைவி, உறவினருடன் சேர்ந்து ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஷஜினாபானுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், முபாரக்கை பேச வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் செல்லவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம், ஆம்பூரில் இருந்து ரயிலில் சேலத்துக்கு மாலையில் முபாராக் வந்துள்ளார். இதையறிந்த ஷஜினாபானுவின் உறவினர்கள் 3 பேர், முபாரக்கை பைக்கில் கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகே அழைத்து கொண்டு ஷஜினா பானுவின் அந்தரங்க படத்தை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்தது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரமடைந்த ஷஜினாபானுவின் உறவினர்கள், முபாரக்கை கழுத்தை அறுத்தும், முகத்தை சிதைத்தும், கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. இதை தொடர்ந்து, முபாரக்கின் மனைவி ஷஜினாபானு மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் திருமணம் செய்த 10 நாளில் வாலிபர் கொடூர கொலை: மனைவியின் உறவினர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Kandampatty Railway Gate ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...